Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு - பிரதமர் மோடியின் படத்துடன் தற்காலிக சான்றிதழ் : தேர்தல் விதிகளை மீறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் மோடியின் படத்துடன் வழங்கப்படும் தற்காலிக சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தயாநிதி, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாகவும் தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 விலை யிலும் போடப்படுகிறது.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு பதிவு செய்யப்பட்ட தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதில், பிரதமர் மோடியின் படத்துடன் ‘டுகெதர் இந்தியா வில் டிஃபீட் கோவிட்-19’ என்ற ஆங்கில வாசகமும் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், ஏற்கெனவே பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் உள்ள பிரதமர் மோடியின் படத்தையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக வேலூர்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் தயாநிதி அளித்துள்ள மனுவில், ‘‘வேலூர் மாநகரில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படத்துடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் இத்தகைய விளம்பரம் நடத்தை விதிகளை மீறியதாகும். எனவே, தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத் துறைஅதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். அதில், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளும் இணைப்பும் உள்ளது.

அந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அது மத்திய அரசின் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. மேலும், அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தற்காலிக சான்றிதழ் எதையும் நகல் எடுத்துக் கொடுப்பதுஇல்லை’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x