Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல்

நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தது தவறுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசுவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டம் குறித்து புகார் கூறி வரும் நிலையில், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் பேசியுள்ளார்.

கவுசிக் பாசுவுடன் ராகுல் காந்தி பேசியதாவது: 1975 முதல் 1977 வரை 21 மாதங்களாக நாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியிருந்தார். அது நிச்சயமாக தவறு என்று நான் கருதுகிறேன். ஆனால், அப்போதும்கூட நாட்டின் அமைப்புகளை காங்கிரஸ் கட்சி, சீர்குலைக்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அப்படிச் செய்யும் தன்மை காங்கிரஸுக்கு இயல்பிலேயே இல்லை எங்களின் கட்டமைப்பு அத்தகைய செயல்களை எப்போதும் அனுமதிக்காது.

அப்போதைய நெருக்கடி நிலைக்கும் பாஜகவின் தற்போதைய அவசர நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளிலும் தங்களது ஆட்களை ஊடுருவச் செய்துள்ளது. நீதிமன்றங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளே நிறைந்து காணப்படுகின்றனர்.

நாம் தேர்தலில் பாஜகவினரை தோற்கடித்தாலும்கூட, அவர்கள் நாட்டின் முக்கிய அமைப்புகளில் நிரப்பி வைத்துள்ள சங் பரிவார் ஆட்களை விட்டு நீங்க முடியாது என்பதே உண்மை.

அமைப்புகளின் சுதந்திரத்தை பாஜக தொடர்ந்து அசைத்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் கழுத்தைபாஜக நெரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு என்னால் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்ல முடியும்.மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோது முதல்வராக இருந்த கமல்நாத் என்னிடம் பேசினார். அப்போது அவர், மாநிலத்தில் உள்ள உயரதிகாரிகள் யாரும் அரசு உத்தரவுகளை பின்பற்ற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என்று என்னிடம் தெரிவித்தார். அவர், அதைச் சொன்ன சில நாட்களில் அங்கு காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. இதைத்தான் நான் பாஜகவின் நெருக்கடி நிலை எனக் குறிப்பிடுகிறேன். ஜனநாயகத்தின் அடிப்படையில் தவறு நடந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x