Published : 03 Mar 2021 03:20 AM
Last Updated : 03 Mar 2021 03:20 AM
போபால் கிரிக்கெட் போட்டியில் ‘மேன் ஆப் தி மேட்ச்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சாமானிய மக்களை மிகவும் பாதித்துள்ளது.
சில நகரங்களில் பெட்ரோல் விலை 100-ஐ கடந்துள்ளது.
சாமானிய மக்கள் மீதான மற்றொரு தாக்குதலாக சமையல் காஸ் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்தது. இந்த விவகாரத்தில் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
சமூக ஊடகங்களில் அதிகம் பேர் இந்த விலை உயர்வு தொடர்பாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் மிக சீரியஸாக எழுதிக்கொண்டிருக்க சிலர் நகைச்சுவை உணர்வுடனும் மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிலைப்படுத்தி பலரும் வித்தியாசமாக சிந்திக்கின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நாகம்பள்ளியில் உள்ள வள்ளுவர் பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை பிழையின்றி ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் பரிசு என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த வகையில் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்த விலை உயர்வை தனித்துவமான முறையில் முன்னிலைப்படுத்தினர். இங்குள்ள ஒரு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் மிகச் சிறந்த வீரராக (மேன் ஆப் தி மேட்ச்) சலாவுதீன் அப்பாஸி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு போட்டி அமைப்பாளர்கள் 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT