Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

சத்துவாச்சாரியில் தேர்தல் விதிமீறல் புகாரில் 60-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மீது வழக்கு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக தேமுதிக நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் முதல் வழக்காக பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் முதல் வழக்காக தேமுதிகவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் எதிரே இருந்து தேமுதிகவினர் நேற்று முன்தினம் (பிப்.28-ம் தேதி) வேலூர் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். காவல் துறையினரின் உரிய அனுமதி இல்லாமல் ஊர்வலமாக சென்றதாகக் கூறி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் திருலோகசந்தர் புகாரளித்துள்ளார். அதன்பேரில், தேமுதிக வேலூர் மாவட்டச் செயலாளர் கோபிநாத், பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x