Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

நீரில் மூழ்கி மகள் உயிரிழப்பு, தந்தை மாயம்

ஈரோடு: ஈரோடு நசியனூர் அருகே வாய்க்காலில் குளித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தை வாய்க்கால் நீரில் மாயமானதை அடுத்து அவரைத் தேடும் பணி நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சாலை, கதிர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணபதி (45). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு, காயத்ரி (21), அனு(17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் காயத்ரி திருப்பூரில் உள்ள கல்லூரியிலும், அனு பிளஸ் 1 வகுப்பும் படித்து வந்தனர். சேலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற செல்வகணபதி, ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நசியனூர் பெரிய வாய்க்கால் பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். இதில், காயத்ரி மற்றும் அனு ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்த ஒருவர் காயத்ரியை காப்பாற்றியுள்ளார். இளைய மகள் அனுயைக் காப்பாற்ற செல்வகணபதி நீந்திச் சென்றுள்ளார். அப்போது அவரும் நீரில் மாயமானார். இதுதொடர்பாக சித்தோடு போலீஸாருக்கும், பவானி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் வாய்க்காலில் தேடியபோது, சிறிது தூரத்தில் அனு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். செல்வகணபதியை தொடர்ந்து தேடி வருகின்றனர். சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x