Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
ஈரோடு: ஈரோடு நசியனூர் அருகே வாய்க்காலில் குளித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தை வாய்க்கால் நீரில் மாயமானதை அடுத்து அவரைத் தேடும் பணி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சாலை, கதிர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணபதி (45). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு, காயத்ரி (21), அனு(17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் காயத்ரி திருப்பூரில் உள்ள கல்லூரியிலும், அனு பிளஸ் 1 வகுப்பும் படித்து வந்தனர். சேலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற செல்வகணபதி, ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நசியனூர் பெரிய வாய்க்கால் பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். இதில், காயத்ரி மற்றும் அனு ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்த ஒருவர் காயத்ரியை காப்பாற்றியுள்ளார். இளைய மகள் அனுயைக் காப்பாற்ற செல்வகணபதி நீந்திச் சென்றுள்ளார். அப்போது அவரும் நீரில் மாயமானார். இதுதொடர்பாக சித்தோடு போலீஸாருக்கும், பவானி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் வாய்க்காலில் தேடியபோது, சிறிது தூரத்தில் அனு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். செல்வகணபதியை தொடர்ந்து தேடி வருகின்றனர். சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT