Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

அங்கன்வாடி ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

திருச்சி

திருச்சியில் 3-வது நாளாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப் படியுடன்கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பிப்.22-ம் தேதி காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது, தங்கள் கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி, இரவு- பகலாக தொடர்ந்து 3-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் மாவட்டச் செயலாளர் பி.சித்ரா, பொருளாளர் எஸ்.ராணி உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், மாவட்டப் பொருளாளர் வி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மேனகா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில்...

அரியலூர் அண்ணாசிலை அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 3-வது நாளாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சகுந்தலா தலைமை வகித்தார்.

கரூரில்...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x