Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

சேவை குறைபாடு: வங்கி அபராதம் செலுத்த உத்தரவு

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் சேவை குறைபாடு காரணமாக அபராதம் செலுத்த, கார்ப்பரேஷன் வங்கி க்கு, திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீவலப்பேரி கோட்டை தெருவைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை மகன் முருகன். பாளையங்கோட்டையிலுள்ள கார்ப்பரேஷன் வங்கியில் அவரது கணக்கிலிருந்து, இன்வாட் ரிட்டர்ன் சார்ஜஸ் என்ற வகையில் ரூ.150 , ஜிஎஸ்டி வகையில் ரூ. 27 சேர்த்து மொத்தம் ரூ. 177 பிடித்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பலமுறை வங்கி கிளை மேலாளரிடம் முறையிட்டும், பணத்தை திருப்பித் தராமல் முருகன் அலைக்கழிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்தார். வங்கி கணக்கு வைத்திருப்பவரின் ஒப்புதலின்றி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 177 எடுத்திருப்பது மிகப்பெரிய சேவை குறைபாடாகும் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.20177-ஐ ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று, திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவமூர்த்தி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x