Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

15 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரியில் தெப்பத் திருவிழா

அரூர் அருகே சங்கிலிவாடி கிராமத்தில் தெப்பத் திருவிழா நடந்தது.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 15 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஏரியில் கிராம மக்கள் தெப்பத் தேரோட்டம் நடத்தினர்.

அரூர் அடுத்த செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கிலிவாடி கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் இப்பகுதி மக்கள் உள்ளூர் கோயில் சாமி சிலைகளை அலங்கரித்து ஏரிக்கு எடுத்து வந்து தெப்பத் தேரோட்டம் நடத்துவது வழக்கம். 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பு ஆண்டில் சங்கிலிவாடி பகுதி ஏரி அண்மையில் நிறைந்தது. இந்நிலையில், ஊர் பொது செலவில் வாண வேடிக்கையுடன் கூடிய தெப்பத் திருவிழாவை நேற்று நடத்தினர்.

புதூர் மாரியம்மன், பாப்பார மாரியம்மன், கல்லுர் வேடியப்பன், முத்து வேடியப்பன் கோயில் சிலைகள் இந்த தெப்பத்தில் வைக்கப்பட்டு தெப்பத் திருவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவை ஒட்டி மாவிளக்கு ஊர்வலமும் நடத்தப்பட்டது.

இவ்வாறு தெப்பத் திருவிழா நடத்தினால் நீர்வளம் பெருகி விவசாயம் மேம்படும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்விழாவை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து ரசித்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x