Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

மத்திய அரசை குறை கூறியே ஆட்சி நடத்தினார் நாராயணசாமி காங். படுதோல்வியை சந்திக்கும் - எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கருத்து

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக் கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் படுதோல்வி அடைந்தது. தீர்மானத்தில் பேசிய முதல்வர், மத்திய அரசை குறை கூறியே பேசினார். புதுவை மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும், அதில் எவை நிறைவேற்றப்பட்டது என்பதை தான் கூறியிருக்க வேண்டும்.

நாராயணசாமி தனது அரசின் செயல்பாட்டை கூறாமல் மத்திய அரசு மீது மட்டுமே குறை கூறினார்.

எதையும் சரியாக செய்யவில்லை

நாராயணசாமியின் செயல்பாடு மீது நம்பிக்கையின்றி தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் எதையுமே சரியாக செய்யவில்லை. காங்கிரஸ் அரசு அரும்பார்த்தபுரம் மேம்பாலம் திறந்ததாக கூறி னார்கள். அப்பாலம் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கட்ட தொடங்கியது என்பதும், அத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தது என்பதும்அனைவருக்கும் தெரியும். ரொட்டி,பால் திட்டம் நாராயணசாமி யால்தான் தோல்வியடைந்தது. அத்திட்டத்துக்கு யார் பெயர் மாற்றம் செய்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தரவில்லை. மத்திய உணவு கூடங்களை இடித்து வைத்துள்ளார்கள். சைக்கிள், லேப்டாப் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதி யாருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் போக முடியாத நிலை உள்ளது.

புதிய திட்டங்களை கொண்டு வராமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், ஆளுநரையும் குறை கூறி ஆட்சி நடத்தினார். நாராயணசாமியின் முழுநேரமும் அரசியல் செய்வதில்தான் இருந்தது. அவர்கள் கூறியதில் எதை செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இது வருகிற சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும். வரும் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x