Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

சீர்மிகு வளர்ச்சியை நோக்கி கடலூர் மாவட்டம்தொழில்துறை அமைச்சர் எம்

சீர்மிகு வளர்ச்சியை நோக்கி கடலூர் மாவட்டம்

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

கடலூர் மாவட்டம் கடந்த நான் கரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித் திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித் திருக்கும் தகவல்:

தமிழக முதல்வர், ஏழைப் பெண்களின் நலவாழ்வுக்காக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார். பெண்கள் கல்வி கற்கும் நிலையை ஊக்குவித்து, அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிடத்தக்க செம்மையான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

அத்திட்டங்கள், முறையாக நம் கடலூர் மாவட்ட மகளிரை வந்தடைகின்றன.

23.05.2016 முதல் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் திருமண நிதி உதவித்திட்டங்களில் திருமாங்கல்யம் செய்வதற்காக நடப்பிலிருந்த 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படித்த மணப்பெண்ணிற்கு ரூ.25ஆயிரம் நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வ தற்காக 22 காரட் கொண்ட தலா 8 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு பயின்று தோச்சி பெற்ற திருமண பெண்ணிற்கு திருமண நிதி உதவியாக ரூ50 ஆயிரம் நிதி உதவியுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

2011-ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 46,659 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

இவர்களில் 16,987 பட்டதாரி பயனாளிகள் 29,672 பட்டதாரி அல்லாத பயனாளிகள் ஆவர். மேலும் தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு சீரிய திட்டங்களான மகளிர் குழு மூலம் சுய தொழில் செய்வதற்கு நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, அம்மா பரிசு பெட்டகம், வேலைக்கு செல்லும் மகளிர்க்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பெண்கள் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் அரசு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், “தமிழ்நாடு முதல்வர் கடந்த 08.01.21 அன்று வெளியிட்ட அறிக்கையில் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள், மூடப்பட்ட நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் நலனுக்காக கல்வி நிறுவனங்களில் இணைய வகுப்புகளை நடத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் இணைய வகுப்பில் கலந்து கொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டோட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள்(டேட்டா கார்டுகள்) வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு 2ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 16,777 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள்.

ரூ. 479 கோடியில்

கூட்டுக்குடிநீர் திட்டம்

வடலூரில் ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு பூமி பூஜை நடைபெற்றது. நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினை ஆதாரமாகக் கொண்டு இந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, மங்களூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 625 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு நல்ல குடிநீர் கிடைக்கும். இதற்கு முதல்வர் கடந்த 21.12.2020ம் தேதி முதல்வர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கீழ் வளையமாதேவி பகுதில் கட்டப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதி நவீன தொழில்நுட்பம் மிகுந்த உபகரணங்கள் மூலம் சுத்தகரிக்கப்பட்டு, அது 22 லட்சம் லிட்டர் கொண்ட நீர் சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கிராம குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வழங்கப்பட உள்ளது.

இன்னும் இன்னும் கடலூர் மாவட்டத்திற்கு, வரும் காலங்களில் அதிமுகவின் செம்மை மிகு ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த தயாராக இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x