Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

திருச்சி திமுக மாநாட்டின் வெற்றியை சென்னை கோட்டையில் எதிரொலிக்க செய்வோம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் மார்ச் 14-ம் தேதி நடக்கும் திமுகவின் 11-வது மாநில மாநாட்டின் வெற்றி, சென்னை கோட்டையில் எதிரொலிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தபோது, காலிசிலிண்டர்களுடன் பாஜக போராட்டம் நடத்தியது. இப்போது பாஜகஆட்சியில் சிலிண்டர் விலைரூ.787.50. இதுதான் இல்லத்தரசிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள அதிர்ச்சிப் பரிசு.

திமுக ஆட்சியின்போது 2011-ல்ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.63.37. டீசல் விலை ரூ.43.95. அதற்கே அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இப்போது அதிமுகஆட்சியில் பெட்ரோல் ரூ.91.19. டீசல் ரூ.84.44. பெட்ரோலியத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அரசு விதிக்கும் கலால்வரியும், அதிமுக அரசின் வாட் வரியுமே இந்த விலையேற்றத்துக்கு காரணம்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் துயரங்களில் தோள் கொடுக்கும் இயக்கம் திமுக. அதனால்தான் திமுகசார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் பிப்ரவரி 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து எழுச்சிமிகு போராட்டமாக இதை திமுகவினர் நடத்த வேண்டும்.

தேர்தல் நெருங்கும் நிலையில்புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றிவிடலாம் என அதிமுக அரசு நினைக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் ரத்து என நான் கூறியதும் கூட்டுறவு சங்கக் கடன்களை ரத்து செய்கிறார்கள். அவசர அறிவிப்புகளை வெளியிடும் அதிமுக அரசிடம் இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

திமுகவின் வெற்றியை தட்டிப்பறிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைத்துவித நூதன முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அதைமுறியடிக்க, திமுகவின் ஜனநாயகஅறவழிப் போர்ப்படை ஆயத்தமாக இருக்க வேண்டும்.

அந்த ஆயத்தப் பணிகளுக்கான பாசறையாக திமுகவின் 11-வது மாநில மாநாடு வரும் மார்ச் 14-ம் தேதி திருச்சியில் நடக்க உள்ளது. கருணாநிதியும், அன்பழகனும் இல்லாத முதல் மாநாடு நடக்கிறது. அவர்கள் இல்லை என்ற சுவடே தெரியாமல், அவர்களின் அடியொற்றி பயணிப்போம். 11-வதுமாநில மாநாட்டை மகத்தான வெற்றி பெறச் செய்வோம். அதில்தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி, கருணாநிதி அரசை விரைவில் தமிழகம் காண ஆயத்தமாவோம். மலைக்கோட்டை மாநகரத்தில் நடக்கும் மாநாட்டின் வெற்றியை சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கச் செய்திடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x