Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
சேலம்: சேலம் ஆட்சியர் பங்களா எதிரே உள்ள பூட்டு முனியப்பன் கோயிலில் இருந்த காளியம்மன் சிலையை திருடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் ஆட்சியர் பங்களா எதிரே பூட்டு முனியப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் பூட்டு போட்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். கோயில் வளாகம் முழுவதும் பூட்டுகளால் நிறைந்திருக்கும். இக்கோயில் வளாகத்தில் இரண்டு அடி உயரம் கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட காளியம்மன் சிலை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
நேற்று (19-ம் தேதி) காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் வெண்கலத்தால் ஆன காளியம்மன் சிலை திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து, சன்னதியில் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள காளியம்மன் சிலையை திருடி இருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் நள்ளிரவில் கோயிலுக்கு வந்த கும்பல் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். பழைய குற்றவாளிகளின கைரேகையை ஒப்பிட்டும் கோயில் சிலையை திருடிய கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT