Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து, இந்தியாவின் பேட்டிங் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் ரிஷப் பந்த். ஆஸ்திரேலிய தொடரில் கடைசி டெஸ்ட்டில் இந்தியாவை வெற்றிபெற வைத்தது, அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதன்மூலம் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்தை எட்டியுள்ள பந்த், ஒரு காலத்தில் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மநிலத்தில் பிறந்த ரிஷப் பந்த், சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்றார். ஷிகர் தவனின் பயிற்சியாளர் தாரக் சின்ஹாதான் ரிஷப் பந்துக்கும் பயிற்சியாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் டெல்லி அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி இருந்ததால், ராஜஸ்தானுக்கு குடிபெயரும்படி ரிஷப் பந்த்திடம் ஆலோசனை கூறியுள்ளார் தாரக் சின்ஹா.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற ரிஷப் பந்த், அம்மாநிலத்தின் 15 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார். ஆனால் அதன்பிறகு ரிஷப் பந்த் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆட எதிர்ப்பு எழுந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ரிஷப் பந்த், அந்த அணிக்காக ஆடத் தொடங்கினார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், 2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். இதில் ஒரு போட்டியில் 18 பந்துகளில் 50 ரன்களையும், மற்றொரு போட்டியில் 96 பந்துகளில் 111 ரன்களையும் குவித்ததன் மூலம் இளைஞர்களின் ஹீரோ ஆனார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது நகலாக தற்போது கிரிக்கெட்டில் தடம்பதித்து வருகிறார் ரிஷப் பந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT