Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
“மக்களை திமுக மறந்ததால், திமுகவை மக்கள் மறந்துவிட்டனர்” என தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
வைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் முதல்வர் பேசியதாவது: மழை வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியுள்ளோம். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அதிமுக அரசு பாதுகாக்கும்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், 99 ஆயிரம் பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. மேலும், 1 லட்சம் பேருக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மகளிர் குழுவினருக்கு நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக ரூ.82 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மட்டும் ரூ.12,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டத்தை அறிவித்து, உதவிக்கு 1100 என்ற எண்ணையும் வழங்கி உள்ளேன். இந்த எண்ணில் வீட்டில் இருந்தபடியே அழைத்து குறைகளை தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும். இது விஞ்ஞான உலகம். மனு எழுதி அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, அதிமுக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. மக்களிடம் குறைகள் கேட்கும் அவர், மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்வதில்லை. நாட்டு மக்களை திமுக மறந்ததால், மக்கள் திமுகவை மறந்துவிட்டனர்.
ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றார் முதல்வர்.
இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு, அதிமுக அமைப்புச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், போ.சின்னப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT