Published : 16 Feb 2021 03:11 AM
Last Updated : 16 Feb 2021 03:11 AM

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் டேங்க்குகளில் தண்ணீர் புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தல்

சென்னை

பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்படுவதால், வாகன பெட்ரோல் டேங்க்குகளில் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டேங்க்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்புஎன பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு ஆணையின்படி, தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்கின்றன. வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும் போதும் வாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் கசிந்திடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், பெட்ரோலில் உள்ள எத்தனாலை தண்ணீர் ஈர்த்துக்கொண்டு, டேங்க்கின் அடியில் சென்று தங்கிவிடும். அத்துடன், எத்தனாலை தண்ணீராக மாற்றிவிடும். இதனால், வாகனத்தை இயக்கக் கடினமாக இருக்கும். அல்லது ஓட்டும்போது வாகனம் குலுங்கிச் செல்லக்கூடும்.

பெட்ரோல் விற்பனையாளர்கள் தீவிர தரக் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து பெட்ரோலை விற்பனை செய்கின்றனர்.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களின் பெட்ரோல் டேங்க்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு.

வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் தரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். பெட்ரோல் விற்பனை நிலையத்தை விட்டு வாகனம் வெளியே சென்ற பிறகு எங்களால் எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x