Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM
வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள கோவளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் தனது சித்தி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு உதவி செய்ய சென்றார். அங்கு சித்தியின் கணவர் மதன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதை அறிந்த சிறுமியின் தாய், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 22 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, குற்றம் தொடர்பான அறிவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதோடு சாட்சிகளிடம் வாக்குமூலத்தையும் போலீஸார் பெற்றுள்ளனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 22 பேர் மீதும் குற்றப்பத்திரிகையை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT