Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட மணமக்கள்

இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோவையைச் சேர்ந்தவர் ஸ்வேதா. பட்டதாரிகளான இருவரும் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. ஆழ்கடல் நீச்சலில் விருப்பமுள்ள சின்னதுரை, தங்கள் திருமணத்தை வித்தியாசமாக கடலுக்குள் நடத்த விரும்பினார். இதற்காக தனது உறவினரான புதுச்சேரியைச் சேர்ந்த ‘ஸ்கூபா டைவிங்’ ஆழ்கடல் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் அரவிந்த் என்பவரை அணுகினார். அவரும் அதற்கு முன்வந்தார்.

அதைத்தொடர்ந்து, மணமகளின் பெற்றோரிடம் ஆழ்கடல் திருமணம் பற்றி எடுத்துரைத்து சம்மதம்பெற்றனர். தொடர்ந்து மணமகளுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்தனர். இதைத்தொடர்ந்து, நீலாங்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில், இந்து பாரம்பரிய முறைப்படி இந்தத் திருமணம் நேற்று நடைபெற்றது.

மணமகன் பட்டு வேட்டி சட்டை,மணமகள் கூரைப் புடவை அணிந்துபடகில் சென்றனர். பின்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆழ்கடலுக்குச் சென்றனர். ஆழ்கடலில் இருக்கும் செடிகளின் பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு, நீந்தியபடியே இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டினார்.

இந்த ஆழ்கடல் திருமணத்தை ஒருங்கிணைத்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:

கடந்த வாரமே திருமணத்தை நடத்த ஆயத்தமாகி விட்டோம். ஆனால், கடல் சூழல் உகந்ததாக இல்லை. அதனால் இன்று (நேற்று)நடத்தினோம். மணமகன் ஏற்கெனவே ஆழ்கடல் நீச்சல் அறிந்தவர். மணமகளுக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்தோம். அதையடுத்து 3 படகுகளில் 5 கடல் மைல் தொலைவு கடலுக்குள் சென்றோம்.

மணமக்கள் பாரம்பரிய உடையுடன் கடலில் இறங்கினர். பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடைகளில் சில எளிய மாற்றங்களைச் செய்தோம்.இயற்கையை ரசித்தபடி ஆழ்கடலுக்குள் இனிதே திருமணம் நடந்துள்ளது. இந்திய அளவில் இந்துமுறைப்படி ஆழ்கடலில் நடந்த முதல் திருமணம் இதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x