Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

‘மிஷன் 200’ இலக்கையும் தாண்டி வெற்றி விளைந்திருக்கிறது அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

‘மிஷன் 200’ என்ற இலக்கையும்தாண்டி வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்ட தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை திமுக கூட்டணிதான். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் இயக்கம் திமுக. டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக குரல் கொடுத்தது. குடியரசு நாளில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும்.

தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் பழனிசாமி, ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி என்று சேறு வாரி இறைக்கிறார். ஊழலுக்காக இருமுறை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜனநாயகம் காக்கும் அறப்போர் களத்தில்உறுதியாக இருந்த காரணத்தால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

என் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்று அதிமுகவில் ஆளாளுக்கு கேட்கிறார்கள்.கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்ட நான் எப்போதும்போல எனக்கான தொகுதியில் போட்டியிடுவேன். ஆனால், 234 தொகுதிகளிலும் கருணாநிதி போட்டியிடுவதாக நினைத்து போட்டியிடுவேன். அதிமுக அமைச்சர்களில் ஒருவர்கூட வெற்றி பெற முடியாதபடி மக்களின் தீர்ப்பு இருக்கும்.

ஜனவரி 29-ம் தேதி முதல்‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'என்ற பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். இந்தப் பயணத்தின்போது மக்கள் அளிக்கும் மனுக்கள், திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் பரிசீலிக்கப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென தனித்துறை உருவாக்கப்படும். மக்களின் மனுக்களை நேரில் பெறுவதற்காக 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.

ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 100 நாட்களும் அதற்கு மேலும் அயராது உழைக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுகவின் வெற்றியை குறுக்கு வழியில் தடுக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் சதிவலைகளை அறுத்தெறிய வேண்டும்.‘மிஷன் 200’ என்ற இலக்கையும்தாண்டும், வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரைஅர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x