Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

வேளாண் சட்டங்களைக் கண்டித்து மும்பையில் இன்று விவசாயிகள் பேரணி

மும்பை: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து மகாராஷ்டிர விவசாயிகள் மும்பையில் இன்று பேரணி நடத்தவுள்ளனர்.

வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில் பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சட்டங்களைக் கண்டித்து மகாராஷ்டிராவிலுள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று முன்தினம் நாசிக்கில் கூடினர். அங்கிருந்து அவர்கள் மும்பையை நோக்கி பேரணியாக நடந்து வந்தனர். 180 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்த அவர்கள் நேற்று மாலை தலைநகர் மும்பையை அடைந்தனர். இதைத் தொடர்ந்து புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மும்பை நகரில் இன்று பேரணி நடத்தவுள்ளனர். ஆசாத் மைதானத்தில் பேரணி தொடங்கவுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இந்தப் பேரணியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய கிசான் சபா விவசாய சங்கத்தின் சார்பில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x