Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

மனைவியை கண்டுபிடிக்கக் கோரிசிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனுத் தாக்கல்

மதுரை: தஞ்சை பேராவூரணி அருகே பெருமகளூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கிரிக்கெட் வீரர். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிங்கப்பூர் நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நானும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு சிநேகா குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் சிநேகாவுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர்.

இதனால் நாங்கள் இருவரும் கடந்த ஆண்டு டிச.13-ல் திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது சிநேகாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். அவரை ஆணவக் கொலை செய்யும் அபாயம் உள்ளது. பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தும் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்கவில்லை. எனவே, எனது மனைவி சிநேகாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x