Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தகவல்

புதுக்கோட்டை பொற்பனைக் கோட்டையில், தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பகுதிகளை பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் புதுக்கோட்டை தொல்லி யல் ஆய்வுக்கழகம் உள்ளிட்ட பலர் சமீப காலமாக கள ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு தரவுகள் கண்டறியப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழ்நாடுதிறந்தநிலைப் பல்கலைக்கழகத் தின் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் கள ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை தயார் செய்தார்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அகழாய்வு செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் கு.ரத்ன குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தரவுகளின் அடிப்படையில்..

தமிழகத்தில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையான பொற்பனைக் கோட்டையானது 50 ஏக்கர் பரப்பளவை கொண்டது. வட்ட வடிவான இக்கோட்டையின் சுற்றளவு 1.6 கிலோ மீட்டராகும். கோட்டை தொடர்பாக பல முக்கிய தரவுகள் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராசவேலு குழுவால் கண்டறியப்பட்டு 2013-ம் ஆண்டு ஆவணம் இதழில் வெளியிட்டப்பட்டது. அதன்படியும், பொற்பனைக் கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து பெறப்பட்ட முக்கிய தரவுகளின் அடிப்படையிலும் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசின் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்துள்ளது.

முக்கியப் பங்கு

அதன்படி, பேராசிரியர் இ.இனியனை இயக்குநராக கொண்டு அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த அகழாய்வு தமிழகத்தின் வரலாற்றாய்வில் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x