Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும்ரூ.2,855 கோடி டெண்டர் ரத்து: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பொதுப்பணித் துறையில் விடப்பட்ட ரூ.2,855 கோடிக்கான டெண்டர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையில் 2020 நவம்பர், டிசம்பர், 2021 ஜனவரி ஆகிய 3 மாதங்களில் ரூ.2,855 கோடிக்குமேல் டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதமே எஞ்சியிருக்கும் சூழலில், எதிர்பார்ப்புடன் டெண்டர்களை விடுவதும், பின்னணி அறிந்தே அதற்கு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதும் அதிர்ச்சி அளிக்கிறது.

இன்னும் 4 மாதத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x