Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

புதுச்சேரி ஆளுநரையும், அரசையும் கண்டித்து மறியல் செய்ய முயன்ற அரசு ஊழியர் சம்மேளனத்தினர் கைது

ஆளுநரையும், புதுச்சேரி அரசை யும் கண்டித்து விடுப்பு எடுத்து மறியல் நடத்த முயன்ற அரசு ஊழியர் சம்மேளனத்தினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் மக்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் துணைநிலை ஆளுநர், அரசை கண்டித்து நேற்று அரசு ஊழியர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் விடுப்பு எடுத்தனர். அனைத்து பிரிவு ஊழியர்களும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து அண்ணாசாலை அருகே கூடி ஊர்வலமாக சென்றனர். மிஷன் வீதி அருகே வந்தபோது போலீஸார் அவர்களை தடுத்ததால், மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர்.

போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், “பல அரசு சார்பு நிறுவனங்கள் கூட்டுறவு, தன்னாட்சி நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 10 ஆயிரம் ஊழியர்கள் பல மாதமாக ஊதியம் பெறவில்லை. மத்திய அரசும் மாற்றாந்தாய் போக்கோடு நிதி ஆதாரங்களை குறைத்து புதுவை அரசை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மத்திய அரசு நிர்வாகியான ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகசெயல்படுகிறார். மின்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறார். 3 பஞ்சாலைகளை மூடஉத்தரவிட்டுள்ளார். அதனால்இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மக்கள், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் துணைநிலை ஆளுநர், அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் சம்மேளனத்தினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x