Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

நா காக்க…

‘கண்ணியத்தை மீறும் மேடைப் பேச்சுகள் தமிழகத்துக்குத் தலைக்குனிவு’ என்ற ஜனவரி 11-ம் தேதி தலையங்கத்தை 10-ம் வகுப்பு படிக்கும் எனது மகள் வாசித்து என்னிடம் பகிர்ந்துகொண்டது மிகவும் வேதனை தந்தது! இன்றைய இளைய சமூகம் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உதயநிதி, ராஜேந்திரபாலாஜி போன்றோர் தனிமனிதச் சொற்போர் தொடங்கும் முன்பு நம் தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சார உயர்வை ஒரு கணம் உணர வேண்டும். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது என்பதற்காகத் தான் என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், வார்த்தைகள் எதிராளியைச் சுட்டுவிடுமோ என்கிற அச்சமெல்லாம் யாருக்கும் இல்லை என்பது வேதனையின் உச்சம்! அதுவும் முன்வரிசைத் தலைவர்கள் சிலர் பேசுவது தெருச் சண்டையைவிட அருவருப்பாக இருக்கிறது. கருணாநிதி கலந்துகொண்ட பொதுக் கூட்டங்கள் எந்த அளவுக்கு திமுக ஆட்சி அமைக்கக் கைகொடுத்தன என்பதைப் பற்றி அறிந்துகொள்ள ஓய்வு நேரங்களில் அந்தக் காணொளிகளை உதயநிதி காண வேண்டும். ‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்/ சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்கிற திருக்குறளுக்கு, ‘ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்!’ என்று கருணாநிதி எழுதிய தெளிவுரை நினைவுக்கு வந்து செல்கிறது!

-இரா. முத்துக்குமரன், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x