Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM
வடகிழக்கு பருவமழை வரும் 19-ம் தேதி விலக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக நாளை (ஜன.18) முதல் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலடுக்கு சுழற்சி
வடகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் மற்றும்அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக 17-ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18, 19, 20தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும்.
குடவாசலில் அதிக மழை
16-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 5 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 4 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT