Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ரசித்த ராகுல் கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாட்டம்

மதுரை

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் அன்பழகன் தலைமையில் காலை 8 மணிக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த் துவிடப்பட்டன. அதையடுத்து 600 காளை கள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட்டன.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்குத் தங்கக் காசு, மோட்டார்சைக்கிள், மிக்சி, மொபைல் போன், கிரைண்டர், சைக்கிள் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் காலை 11.15 மணிக்கும், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 12 மணிக்கும் ஜல்லிக்கட்டைப் பார்க்க அவனியாபுரம் வந்தனர். இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்து காளைகள் துள்ளி விளையாடுவதைப் பார்த்து ரசித்தனர். இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரம், தங்கக் காசுகளைப் பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தினர். ராகுல் சார்பில் சிறந்த மாடுபிடி வீரர்கள் 2 பேருக்கு பைக் பரிசளிக்கப்பட்டது.

அப்போது ராகுல்காந்தி பேசியதாவது: தமிழர்களின் கலாச்சாரம், தமிழின் சிறப்பு இந்தியாவுக்கு முக்கியம். தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை பார்க்கவே நேரில் வந்துள்ளேன். தமிழ்மொழியை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருபவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தமிழக மக்களோடு நிற்க வேண்டியது எனது கடமை, என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, மதுரை என்றால் வீரம். அவனியாபுரத்துக்கு முதல்முறையாக வந்துள்ளேன். இனி ஆண்டுதோறும் வருவேன், என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாணிக்கம் தாகூர் எம்பி, ராமசாமி எம்எல்ஏ ஆகியோரும் ராகுலுடன் வந்திருந்தனர். அவனியாபுரம் வந்த ராகுலுக்கு பழங்காநத்தம், தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழங்காநத்தம் ரவுண்டானாவில் காங்கிரஸ் சார்பில் நடந்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச் சியை ராகுல் கண்டுகளித்தார். தென்பழஞ்சியில் நடந்த பொங்கல் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்று பொதுமக்களுடன் உணவருந்தினார்.

ராகுலுக்கு ஜெய்ஹிந்த்புரம் அருகே கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x