Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
பட்டுக்கோட்டை அருகே வாய்க் காலில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை அறியாமல், நேற்று வாய்க்காலில் இறங்கிய அண்ணனும், தம்பியும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே மறவக்காடு கிரா மத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகன்கள் தினேஷ்(12), கவுதம்(10). இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், நேற்று காலை 10 மணியளவில் ஆட்டுக்குட்டிக்கு தழை பறிப்பதற்காக வயல் பகுதிக்குச் செல்ல தினேஷ், கவுதம் இருவரும் மறவக்காடு வாய்க்காலில் இறங்கினர்.
அப்போது, அங்குள்ள மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து, வாய்க்காலில் விழுந்து கிடந்ததால், இவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்ததும், உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, வாய்க்கா லில் இறந்து கிடந்த சிறுவர்களின் சடலங்களை மீட்டனர்.
தகவலறிந்து வந்த மதுக்கூர் போலீஸார், இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோ தனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின் ஊழியர் கைது
மறவக்காடு வாய்க்காலில் மின்கம்பி அறுந்துவிழுந்து கிடப்ப தாக நேற்று காலையிலேயே அத்திவெட்டியைச் சேர்ந்த மின் கம்பியாளர் சித்திரவேலிடம்(43) அப்பகுதி மக்கள் நேரிலும், தொலைபேசியிலும் புகார் தெரிவித்ததாகவும், அவர் வந்து சரிசெய்வதாகக் கூறிவிட்டு, உரிய நேரத்தில் வராததாலும் இந்த உயிரிழப்பு நேரிட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அஜாக்கிரதையாக செயல்பட்டதாக சித்திரவேலை மதுக்கூர் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருக் காட்டுப்பள்ளி அருகே நேற்று முன்தினம் தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அறுந்து கிடந்த மின்கம்பியால் மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி உயிரிழந்தது அப்பகுதியினரிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்
பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் மனைவி பக்கிரியம்மாள்(68). நேற்று முன்தினம் மாடு மேய்க்கச் சென்ற இவர், அன்று மாலை பட்டவர்சாமி கோயில் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால்மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT