Published : 14 Jan 2021 03:23 AM
Last Updated : 14 Jan 2021 03:23 AM

சிறுமி, இளம்பெண் விபத்தில் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் இளம்பெண், சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடீயூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(35). இவர் கோயம்புத்தூரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி கோபாலகிருஷ்ணன், தனது மனைவி விஜயா (34), மகள் யாசிகா(8), மகன் பிரனேஷ்(3) மற்றும் உறவினர்கள் 6 பேர் என, மொத்தம்10 பேர் நேற்று முன்தினம் இரவு சொந்தஊருக்கு புறப்பட்டனர். இவர்கள் கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான சுமை ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவை ஆனந்தராஜ் மகன் பாஸ்கர்(37) என்பவர் ஓட்டிவந்தார்.

நேற்று காலை 7 மணி அளவில் கோவில்பட்டி அருகே இடைசெவல் விலக்கு பகுதியில் சென்றபோது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக சுமை ஆட்டோ மோதியது. இதில், ஆட்டோவில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி சத்தம் போட்டனர்.

ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் மனைவி சுமத்ரா(35), கோபாலகிருஷ்ணனின் மகள் யாசிகா(8) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோபாலகிருஷ்ணன், அவரது மனைவிவிஜயா, மகன் பிரனேஷ், ஓட்டுநர் பாஸ்கர், அவரது மகன் ராஜ்குமார்(4), சந்திரசேகர் மகன்பார்த்தீபன்(20), ராதாகிருஷ்ணன் மகள் பிரீத்தா(20) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.

டிஎஸ்பி கலைக்கதிரவன், காவல் ஆய்வாளர் சுகாதேவி, உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி மற்றும் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நாலாட்டின்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x