Published : 14 Jan 2021 03:23 AM
Last Updated : 14 Jan 2021 03:23 AM

தொடர் பெய்த மழையால் பொங்கல் பண்டிகை வியாபாரம் பாதிப்பு

கோவில்பட்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு காய்கறிகள், கரும்பு, மஞ்சள் குலை மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம்களைகட்டும். கோவில்பட்டி நகரப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் கரும்புகள், கலர் கோலப்பொடி, மஞ்சள் குலை, ஆயத்த ஆடை, பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வியாபாரிகள் அமைப்பார்கள்.

இந்தாண்டு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும், இன்று(14-ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நேற்று காலை முதல் கோவில்பட்டி விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டனர்.

சூரியனுக்கு காய்கறிகள் படைத்து வழிபடும் வழக்கம் என்பதால், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தபடி நகராட்சி தினசரி சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர். ஆனால், மாலை 3 மணிக்கு பின்னர் காற்று எதுவும் இல்லாமல் கனமழையாக உருவெடுத்தால், சாலையோரத்தில் வியாபாரத்துக்காக வைத்திருந்த மஞ்சள் குலைகளை ஆங்காங்கே போட்டுவிட்டு வியாபாரிகள் ஊர் திரும்பினர். அதே போல் உதிரிபூக்கள் வியாபாரமும் குறைந்து காணப்பட்டது.

வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல்பண்டிகைக்கு முந்தைய நாள், எங்கள் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் குலைகளை நேரடியாக விவசாயி களிடமிருந்து வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறோம். எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டும் கனமழை பெய்து எங்களது வியாபாரத்தை படுகுழியில் தள்ளிவிட்டது. பருவம் தப்பிய மழையால் நாங்கள் மட்டுமல்ல, எங்கள் ஊரைச்சேர்ந்த விவசாயிகளின் அறுவடைப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு தீபாவளி வியாபாரத்தை பாழாக்கியது. மழையால் பொங்கல் வியாபாரமே இல்லாமல் போய்விட்டது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x