Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: விவசாயிகள் விரோதச் சட்டங்களை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்ற விவசாயிகள் தரப்புநிலையைக் கருத்தில் கொண்டு குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: 3 வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாஜக அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தற்காலிக தடை என்பது தற்காலிக வெற்றியே தவிர அதை நிரந்தர தீர்வாக கருத முடியாது. முதல்கட்ட வெற்றியாக கருதலாம். 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதேநேரத்தில் பெரு நிறுவனங்களுக்கான புதிய வேளாண் சட்டங்களுக்கு நிரந்தரமாக தடை விதிப்பதே விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வாக அமையும்.
கொமதேக பொதுச்செய லாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: கடந்த 49 நாட்களாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடி யதற்கு, கிடைத்த வெற்றிதான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT