Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ராமநாதபுரம் அருகே கன மழை வீடு இடிந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே கனமழை யால் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். அவரது கர்ப்பிணி மனைவி, மைத்துனர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை ஊராட்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகராஜ்(22). இவரது மனைவி சங்கீதா(19). சங்கீதாவின் அண்ணன் கூலித் தொழிலாளியான மூர்த்தி(24). இவர்கள் 3 பேரும் நேற்று சண்முகத்தின் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை பெய்த கன மழையால் திடீரென ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இடி பாடுகளுக்குள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டனர்.

சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தி, நான்கு மாத கர்ப்பிணியான சங்கீதா ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இது குறித்து சங்கீதா கூறிய தாவது: எனது கணவரும், அண்ணனும் டிரம்செட் வாசிக்கும் தொழிலுக்குச் சென்றுவிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அதன்பின் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 5.30 மணியளவில் வீடு இடிந்து விழத் தொடங்கியது. அப்போது படுக்கையில் இருந்து எழுந்த எனது கணவர் என்னை பிடித்து வீட்டின் வெளியே தள்ளி விட்டார்.

அதனால் நான் காயத்துடன் உயிர் தப்பினேன். ஆனால் எனது கணவர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார் என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x