Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 96 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 9, அஜிங்க் ரஹானே 5 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
கேப்டன் ரஹானே 22 ரன் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். அதன்பின், ஹனுமா விகாரி 4, ரிஷப்பந்த் 36 ரன்கள், புஜாரா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களில் ரன் அவுட் ஆனார். இவர்களைத் தொடர்ந்து நவ்தீப் சைனி 3, ஜஸ்பிரித் பும்ரா 0, மொகமது சிராஜ் 6 ரன்களில் நடையை கட்ட இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
94 ரன்கள்முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. 197 ரன்கள்முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கின் போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பாட் கம்மின்ஸ் பந்து வீச்சிலும் ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க் பந்திலும் காயம் அடைந்தனர். எனினும், இருவரும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். பின்னர் இருவருக்கும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜடேஜாவின் இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. ரிஷப் பந்த்தின் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அது பெரிய அளவில் இல்லை. இதனால் ஜடேஜா 6 வாரங்களுக்கு களமிறங்க முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிட்னி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொகமது சிராஜ் ஆகிய இருவரையும் இனரீதியாக ரசிகர்கள் சிலர் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT