Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம்

கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் சார்பில், பொங்கல் நெரிசலை சமாளிக்க கோவை கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையைக் கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர்.

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தருமபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேசுவரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, ராஜபாளையம், குமுளி, தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் சார்பில், கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சேலம் மற்றும் சேலத்தைக் கடந்தும், திருச்சி மற்றும் திருச்சியைக் கடந்தும் செல்லும் பேருந்துகள், கூடுதலாக சேலம் மற்றும் திருச்சிக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயணிகளுக்குத் தேவையான தற்காலிக நிழற்குடை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x