Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

நாகை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் வழக்கமாக 45 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு 48 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 6 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக திருப்பூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட 45 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 33 சதவீதம் அதிக மாக பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் 16 மாவட்டங்களில் வழக்கத்தைவிட மழை குறைவாகவே பெய்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 சதவீதம், திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் 30 சதவீதம், நாமக்கல் மாவட்டத்தில் 25 சதவீதம் மழை குறைவாக பெய்திருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பல இடங்களில் வறண்ட வானிலை நிலவியதால், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துவிடுமோ என பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்தில் இருந்தனர்.

இதனிடையே, தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுவது வலுப் பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

6-ம் தேதி (இன்று) சென்னை உள் ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங் கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் ஆகியவற்றில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் 7-ம் தேதி பெரும் பாலான இடங்களிலும், 8-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9-ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ம் தேதி வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

5-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், படூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., சென்னை தரமணி, கிண்டி, சென்னை விமான நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், கொளப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வழக்கமாக 3 மி.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு 25 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 7 மடங்கு அதிகமாகும். வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஜனவரி 12-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x