Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால்போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த செப்டம்பரில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற 7-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் இருந்தனர். ஆனால் இந்த சட்டங்களில் உள்ள பிரச்சினைக்குரிய பிரிவுகள் அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு விரும்பியது. எனினும் இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 8-ம் தேதி இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ட ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் உள்ளனர். டெல்லி எல்லைப் பகுதிகளில் முற்றுகைப் போராட்டத்தை அவர்கள் தொடர்கின்றனர். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் டெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தில் பேரணி நடத்தப்போவதாக அவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

இதனிடையே எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் காரணமாக டெல்லியில் மூடப்பட்டுள்ள சாலைகள் மற்றும் அவற்றுக்கான மாற்று வழிகள் குறித்த அறிவிப்பை டெல்லி போக்குவரத்து காவல் துறை நேற்று வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x