Published : 05 Jan 2021 08:21 AM
Last Updated : 05 Jan 2021 08:21 AM

உடன்பாடு எட்டப்படுவதில் இழுபறி நீடிப்பு மத்திய அரசு, விவசாயிகள் இடையே ஜன. 8-ல் மீண்டும் பேச்சுவார்த்தை

மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே நேற்று 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து வரும் 8-ம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 40-வது நாளாக நீடித்தது.

மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. விவசாயிகள் தரப்பில் 4 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதாவது வேளாண் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் தேசிய தலைநகர் காற்று தர மேலாண்மைக்கான அவசர சட்டம், மின்சார அவசர சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

எனினும் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் நேற்று 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசு தரப்பில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர்பாக இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக அரசு தரப்பில் சாதகமான பதில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடியாது என்று அரசு தரப்பில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன்காரணமாக பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகேத் கூறும்போது, "வேளாண் சட்டங் களை வாபஸ் பெற வேண்டும் என்பதே எங் களின் பிரதான கோரிக்கை. இதுதொடர்பாக கலந்து பேசிவிட்டு கூறுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறும். அப்போதும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை மட் டுமே வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, "புதிய வேளாண் சட்டங் களின் ஒவ்வொரு விதிகள் தொடர்பாகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். இதுவரை சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. வரும் 8-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அப்போது தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x