Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு அவர் நேற்றுஎழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவை யிலும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சாலைகளிலேயே சமைத்து உண்டு, கடந்த37 நாட்களாக பல லட்சக்கணக் கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாத, கார்ப்பரேட்களுக்கு தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது.

முதன்முதலில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம்என்ற முறையில் மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம். தங்களின் உணர்வுகளை தமிழக சட்டப்பேரவை எதிரொலித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தோளோடு தோள் நின்று துணைபுரிய வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் விருப்பமாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய அந்த விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது.

எனவே, பிரதான எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x