Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM
கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 4, 8, 10 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 152 ஒன்றிய பஞ்சாயத்துகள், 941 கிராம பஞ்சாயத்துகள் என 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 21,893 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் முதல்கட்ட தேர்தலில் 72.67%, இரண்டாம் கட்ட தேர்தலில் 76.38%, மூன்றாம் கட்ட தேர்தலில் 78.64% என வாக்குகள் பதிவாயின.
இந்த வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதிலும் 244 மையங்களில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) முன்னிலை பெற்றுள்ளது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் 500-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மேலும் 10 மாவட்ட பஞ்சாயத்துகள், 108 ஒன்றிய பஞ்சாயத்துகள், 5 மாநகராட்சிகள், 35 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 4 மாவட்ட பஞ்சாயத்துகள், 44 ஒன்றிய பஞ்சாயத்துகள், 376 கிராமபஞ்சாயத்துகள், 1 மாநகராட்சி, 45 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 23 கிராம பஞ்சாயத்துகள், 2 நகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.
கொச்சி மாநகராட்சி காங்கிரஸ்மேயர் வேட்பாளர் என்.வேணுகோபால் 1 வாக்கு வித்தியாசத்தில் தனது வார்டில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “இது கேரள மக்களுக்கு கிடைத்த வெற்றி. கேரளாவை அழிக்க முயன்று வரும் மத்திய அமைப்புகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT