Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வாகனங்களில் திரண்டனர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் போலீஸ் தடியடியால் பதற்றம்பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துபோராட்டம் நடத்துவதற்காக டெல்லியில் விவசாயிகள் திரண்டுள்ளனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் 3 வேளாண்சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா மாநிலவிவசாயிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். கடந்த 13-ம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் தரப்பில் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஏற்கெனவே திட்டமிட்டபடி பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமான டிராக்டர், லாரிகளில் நேற்று முன்தினம் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

மோதல், தடியடி

இதில் பெரும்பாலான விவசாயிகள் பஞ்சாபை சேர்ந்தவர்கள். அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபில் இருந்துவாகனங்களில் பேரணியாக வந்தபோது, ஹரியாணா மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைக்க முயன்றனர். மோதல் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாம் நாளான நேற்று ஹரியாணா போலீஸாரின் தடுப்புகளை மீறி பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறினர். இதையடுத்து நேற்று காலை போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அங்கு பதற்றம் உருவான நிலையில், திடீரென விவசாயிகள் அப்பகுதியை கடந்து செல்ல போலீஸார் அனுமதி வழங்கினர். மேலும்அவர்கள் டெல்லிக்குள் நுழையவும் அனுமதி வழங்கப்பட்டது.

டெல்லியின் திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் மீதுபோலீஸார் தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஈஷ் சிங்கால் கூறும்போது, ‘‘டெல்லியின் புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். எனினும்,சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்துக்கு செல்லாமல் ஆங்காங்கே வாகனங்களுடன் விவசாயிகள் திரண்டிருப்பதால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி முழுவதும் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதற்கிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்நேற்று கூறும்போது, ‘‘விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கரோனா தடுப்பு, குளிர்காலத்தை கருத்தில்கொண்டு போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேசம், உத்தராகண்டை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி வருகின்றனர். அவர்கள் இன்று டெல்லியில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3 லட்சம் விவசாயிகள் டெல்லியில் இன்று திரளுவார்கள் என கூறப்படுகிறது.

ரயில்கள் ரத்து

டெல்லியில் உள்ள 9 விளையாட்டு அரங்குகளை தற்காலிக சிறைகளாக பயன்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசிடம் போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு டெல்லி அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக வடக்கு ரயில்வே 2 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது. 5 ரயில்கள் பாதிவழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் ரயில், பேருந்து, வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றுபோலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து டெல்லி போலீஸாருடன் சிஐஎஸ்எப் உட்பட பல்வேறு படைகளைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிரண் குமார் கூறும்போது, ‘‘தடியடி, கண்ணீர் புகைகுண்டு, கம்பி வேலி, கான்கிரீட் தடுப்பு போன்ற எல்லாவற்றையும் தாண்டி டெல்லியில் நுழைந்துள்ளோம். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுவரை டெல்லியில் முகாமிட்டிருப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x