Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM
இந்தியப் பொருளாதாரம் கரோனா பாதிப்புக்குப் பிறகு எதிர்பார்த்ததை விடவும் வலுவாக மீண்டுக் கொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி பரிவர்த்தனை டீலர்கள் கூட்டமைப்பு நடத்திய ஆண்டு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியப் பொருளாதாரம் கரோனா ஊரடங்கு நடவடிக்கைக்குப் பிறகு பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதுவரை கண்டிராத வகையில் மைனஸ் 23.9 சதவீதமாகப் பதிவானது. ஆனால் இரண்டாம் காலாண்டில் இந்த வீழ்ச்சியில் இருந்து எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கு வேகத்தில் வலுவாக மீண்டு வந்திருக்கிறது.
அதேசமயம் சந்தையில் தேவை மற்றும் நுகர்வு விழா காலத்துக்குப் பிறகும் நீடித்து இருப்பதற்கான காரணிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வரும் அதே சமயம் ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய பகுதிகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மட்டுப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து எடுத்து வரும்.
இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி குறித்த புள்ளி விவரங்களை அரசு இன்று வெளியிட உள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்க இதுவரை அரசு ரூ.29.98 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் அரசும் ரிசர்வ் வங்கியும் உள்நாட்டு சந்தையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT