Published : 26 Nov 2020 03:16 AM
Last Updated : 26 Nov 2020 03:16 AM

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களை தேடிச் சென்று உதவுங்கள் அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை தேடிச் சென்று உதவுவதுடன், அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் அவ்வப்போது தமிழகத்தில் வீசி வருகிறது. இந்த இயற்கை இடர்ப்பாடுகள் நிறைந்த சூழலில், மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உடனுக்குடன் உதவ தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறது.

நிவாரணப் பணிகளிலும், மறுவாழ்வு பணிகளிலும் அரசுக்கு துணை நின்று, மக்களின் துயர் துடைக்கும் பணிகளை அதிமுகவினர் முழுமூச்சுடன் மேற்கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழகம் முழுவதும் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை தேடிச் சென்று, அவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அப்பணிகளை வழக்கம்போல மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் செய்து முடிப்போம்.

அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உடனடியாக களப்பணியாற்ற வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் விரைந்து செய்யுங்கள்.

ஆடைகள், அடிப்படை தேவைகளை இழந்தோருக்கு கட்சியினர் விரைந்து உதவ வேண்டும். தாழ்வான, கரையோரப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனே வெளியேற்ற மின்மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்வரை அவர்களுடன் இருந்து, தேவையானவற்றை செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x