Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

புற்றுநோயால் பாதித்த நடிகர் தவசி மரணம்

தவசி

மதுரை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற நடிகர் தவசி நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

மதுரையை சேர்ந்த குணசித்திர நடிகர் மீசை தவசி. இவர், கிழக்கு சீமையிலே படம் முதல் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் வரை பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் நடித்த வந்தார். சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் பூசாரியாக நடித்த நடிகர் தவசி, பல படங்களில் கிராமத்து கோவில்களின் பூசாரி ஆகவும் பஞ்சாயத்து காட்சிகளிலும் நடித்து பட்டி தொட்டி முழுவதும் பிரபலமானார்.

சமீபத்தில் இவர், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது இயல்பான கம்பீரத்தையும், மீசையும் இல்லாமல் உடல் மெலிந்து ஆளே தெரியாமல் காணப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் தடுமாறினார்.

அவர் சிகிச்சைப்பெற்ற மருத்துவமனை உரிமையாளரும், திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன், அவரது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வந்தார். ஆனால், அது மருத்துவமனை சிகிச்சைக்கான உதவி மட்டும் என்பதால் மற்ற பொருளாதார உதவியில்லாமல் தவித்தார்.

இதையடுத்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியநிலையில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படியும் அவர் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து தமிழ் இந்துவில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த சினிமா நடிகர்கள், நாடக நடிகர்கள், அவருக்கு தன்னார்வமாக வந்து ஏராளமான பொருளாதார உதவிகள் செய்தனர். அதனால், அவருக்கு சிகிச்சை எந்த தடையும் இல்லாமல் சென்றநிலையில் நேற்று இரவு திடீரென்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இன்று உடல் அடக்கம்

அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x