Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்கவே வேல் யாத்திரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இளைஞர்கள் வேலை கேட்டு போராடி வருகின்றனர். இதை மறைக்கவே பாஜகவினர் வேல் யாத்திரை நடத்திக் கொண்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நிதியளிப்பு பொதுக் கூட்டம் மதுராந்தகம் தேரடியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டச் செயலர் வாசுதேவன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

கம்யூனிஸ்ட் இயக்கம் 1920-ம் ஆண்டு தொடங்கியது. இந்திய சுதந்திரப்போராட்டம் கம்யூனிஸ்ட்களின் போராட்டத்துக்கு பின்தான் மக்கள் போராட்டமாக மாறியது. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க வேண்டும், மாநிலங்களுக்கு அதிகாரங்கள் கொடுக்க வேண்டும், தாய் மொழியில் கல்வியை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைத்தன. நிலச் சீர்திருத்தம், பண்ணை அடிமை முறை ஒழிப்பு ஆகியவற்றுக்கான போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான் நடத்தின.

கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 8 மாதங்களில் சாதாரண குடும்பங்கள் தங்கள்வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இக்காலகட்டத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாளிகள் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அரசு முதலாளிகளுக்கு மட்டுமே உதவி செய்கிறது.

நாடு முழுவதும் இளைஞர்கள் வேலைகேட்டு போராடி வருகின்றனர். அதை மறைக்கவே பாஜகவினர் வேல் யாத்திரை நடத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டிய காவல்துறை பாஜகவினருடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. சாதாரண மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை எதிர்த்து வரும் 26-ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இ.சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் வா.பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x