Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
கோவை விமானநிலையத்தில், கடந்த 14-ம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஷார்ஜாவில் இருந்து வந்த 15 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கேரளா மாநிலம் காசர்கோடு, தமிழகத்தின் திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 15 பயணிகளையும் தனி இடத்தில் வைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், தங்கத்தை பசை வடிவில் மாற்றி, உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து ரூ.3.26 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் மற்றும் ஒரு கிலோ தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர, ரூ.1.03 கோடி மதிப்பிலான 6 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள், ரூ.53 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள், ட்ரோன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT