Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

திமுக கூட்டணிக்கே தேர்தலில் வெற்றி: கார்த்தி சிதம்பரம் தகவல்

சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

திமுக ஐபேக் நிறுவனத்தை வைத்து சர்வே எடுத்தது போன்று, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பயன்படுத்துவதற்காக நாங்களும் 234 தொகுதிகளிலும் சர்வே எடுத்து அதை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளோம். காங்கிரஸ் நடத்திய சர்வே மூலம் திமுக கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.

திமுக இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அதற்குள் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. திமுக கூட்டணிக்கு இன்னும் புதிய கட்சிகள் வரவும் வாய்ப்புள்ளது. அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடைபெறும்.

கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி எண்ணிக்கை அடிப்படையில் இருக்காது. கூட்டணிக்கு எது சாதகமாக இருக்குமோ அப்படித்தான் நடைபெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இது, அதிமுகவுக்கு மட்டுமே கிடைத்த வெற்றியல்ல. தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி.

எனது நண்பர் டாக்டர் அருண் இறப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. அதையும் அரசியலாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x