Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

ஷர்மிளாவின் இதயம் கவர்ந்த பட்டோடி

விராட் கோலிக்கும் அனுஷ்காவுக்கும் இடையிலான காதல் இந்த தலைமுறைக்கு தெரிந்த விஷயம். கிரிக்கெட்-பாலிவுட் காதலுக்கு1960-களிலேயே அச்சாரம் போட்டவர் ‘டைகர்’ என செல்லமாக அழைக்கப்பட்ட மன்சூர் அலிகான் பட்டோடி.

21 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று பட்டோடி புகழ்பெற்றிருந்த காலத்தில், பாலிவுட்டின் மகாராணியாக இருந்தார் ஷர்மிளா தாகூர். அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் பெரிய அளவில் இல்லை. கிரிக்கெட் ரசிகையான ஷர்மிளா தாகூர், படப்பிடிப்புகளுக்கு நடுவே அவ்வப்போது கிரிக்கெட் கமெண்ட்ரிகளைக் கேட்பதிலும், கிரிக்கெட்டைப் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இந்த வகையில் பட்டோடியின் பெயர் அடிக்கடி அவர் காதில் விழுந்தது. அவரது அதிரடியான பேட்டிங் ஸ்டைல், ஷர்மிளாவின் இதயத்தைக் கவர்ந்தது. பின்னர் அதுவே மெல்ல மெல்ல காதலாக மாறியது.

அதே நேரத்தில் கிரிக்கெட் இல்லாத நாட்களில் பார்ட்டிகளில் பிசியாக இருந்தார் ‘டைகர்’ பட்டோடி. பல பெண்களுடன் அவர் சுற்றுவதாக அந்நாளில் கிசுகிசுக்கப்பட்டது. இத்தகைய சூழலில், 1965-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஒரு பார்ட்டியில் பட்டோடியும் ஷர்மிளாவும் சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பிலேயே இருவரின் மனதிலும் காதல் தீ பற்றிக்கொண்டது. இவர்களது காதல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக மின்னியது. பட்டோடிக்கு கிரிக்கெட்டும், ஷர்மிளா தாகூருக்கு படப்பிடிப்பும் இல்லாத நாட்களில் இருவரும் ஊர்சுற்றினர். இது பட்டோடியின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்ததாக பலரும் குற்றம்சாட்டினர்.

1960-களின் இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, அங்கு தொடரை மோசமாக இழந்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பட்டோடி, தன் காதலிக்கு பரிசளிப்பதற்காக ஒரு ஃபிரிட்ஜைத் தேடி லண்டனில் கடைகடையாக சுற்றியதாகவும் ஒரு கதை உலவுகிறது. இப்படி பல்வேறு கதைகள் தங்களைச் சுற்றி இருக்க, 1969-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x