Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

தியாகராய நகர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 400 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து துப்பு துலக்கினோம்: கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன் பெருமிதம்

தியாகராயநகர் நகைக் கடை கொள்ளை வழக்கில் 400 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

சென்னை, தியாகராயநகர், மூசா தெருவில், ‘உத்தம் நகை மாளிகை’ என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருபவர் தருண் குமார். இவர் பிற நகைக் கடைகளுக்குத் தேவையான நகை ஆர்டரை மொத்தமாக பெற்று அதை வேறு நிறுவனத்தின் மூலம் செய்து தொடர்புடைய நகைக் கடைக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது, அதே பகுதியில் உள்ள இரண்டு தளம் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில், ஒரு பகுதியில் நகைகளை சேமித்து அலுவலகம்போல் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நள்ளிரவு இவரதுஅலுவலக கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், உள்ளே இருந்த 2.5 கிலோ தங்க நகைகள், தங்க நகை கட்டிகள், வைர நகைகள், 15 வெள்ளிக்கட்டி உட்பட ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

இதுகுறித்து மாம்பலம் காவல் நிலைய போலீஸார் 3 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். தற்போது கொள்ளையில் ஈடுபட்டதாக கோடம்பாக்ககத்தைச் சேர்ந்த மார்க்கெட் சுரேஷ், அவரது கூட்டாளிகள் சைதாப்பேட்டை வெங்கடேசன் என்கிற அப்பு(34), மேடவாக்கம் அமல்ராஜ் என்ற விஷ்ணு(28), திருவள்ளூரைச் சேர்ந்த கங்காதேவி(54) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1.4 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், 11 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் நேற்று கூறியதாவது:

‘3 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. சுமார் 400 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் துப்பு துலக்கினோம். கொள்ளை நடந்த விதத்தை அடிப்படையாக வைத்துமார்க்கெட் சுரேஷ்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும்என்ற முடிவுக்கு வந்தோம்.

அவரை தேடியபோது அவரது கூட்டாளிகளான வெங்கடேசன், விஷ்ணு பிடிபட்டனர். அவர்கள் சைதாப்பேட்டையில் வாடகைஅறை எடுத்து தங்கியிருந்துள்ளனர். கொள்ளையடித்த பின்னர் அறையை காலி செய்துவிட்டனர். கொள்ளையடித்த நகையை கங்கா தேவி வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். அவர் அந்த நகையைபிளாஸ்டிக் கவரில் போட்டு மண்ணுக்கடியில் புதைத்து வைத்திருந்தார். அதை மீட்டுள்ளோம்.

கங்கா தேவி தவிர கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.இவர்களுக்கு சிறையில் இருக்கும்போது நட்பு ஏற்பட்டுள்ளது. வெளியே வந்த பின்னர் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சுரேஷை நாங்கள் தேடியபோது, திருவள்ளுர் போலீஸார் அவரை மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் உட்பட அனைவரையும் எங்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதில், மேலும் பல தகவல்கள் வெளியாகும்’ என்றார்.

இதையடுத்து சிறப்பாக துப்புதுலக்கிய தனிப்படை போலீஸாருக்கு கூடுதல் ஆணையர் தினகரன் பாராட்டி வெகுமதியளித்தார்.

1.4 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், 11 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x