இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
3 min read

ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் முதல் பயணிகள் ரயில் விரைவில் இந்தியாவில் சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்திய ரயில்வேயில் ரயில்கள் டீசல் மூலமும், மின்சாரம் மூலம்தான் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் ரயில்கள் மூலம் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின் உற்பத்தி செய்து, அதன்மூலம் ரயில் இன்ஜின் இயங்குகிறது.

மின் கம்பிகள் அமைத்து அதன் மூலம் ரயில்கள் இயக்க கடினமான இருக்கும் வழித்தடங்களில், அதிக செலவு பிடிக்கும் தளங்களில் ஹைட்ரஜன் ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில்களுக்கு புதிதாக இருப்புப் பாதை தேவையில்லை, ஏற்கெனவே இருக்கும் தளத்தையே பயன்படுத்தலாம்.

எப்போது திட்டம் தொடங்கியது?

கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது, இந்த நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் முடிந்தபின், கடந்த மே 22-ம் தேதி பயணிகளை இயக்க அனுமதியளித்தது.

எவ்வாறு இயங்கும்?

ரயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கலன்களில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் வைக்கப்பட்டிருக்கும், அதைப் பயன்படுத்தி இயக்கப்படும்.இந்த ரயிலில் உள்ள பிரத்யேக கலன்களில் அதிக அழுத்தத்தில் 460 கிலோ ஹைட்ரஜன் நிரப்பப்படும். தினசரி 2 டிரிப்புகளுக்கு 300 கிலோ வரை செலவாகும்; 365 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயிலில் இரு பைலட் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பெட்டிகளில் ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் லித்தியம் பெரோபாஸ் பேட்டரி கொண்ட 4 செட் பவர் பேக் இணைக்கப்பட்டிருக்கும். அதிக அழுத்தத்தில் ஹைடர்ஜன் நிரப்பட்டுள்ளதால், வெளியிலிருந்து வரும் ஆக்சிஜனோடு கலக்கும்போது, வேதி வினையால் மின் உற்பத்தி நடந்து அதன்மூலம் ரயில் இயங்கும்.

ஒரு பவர் பேக் மூலம் 300 கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகும், 115 கிலோவாட் எரிபொருள் மூலமும், 185 கிலோவாட் லித்தியம் பேட்டரி மூலம் உற்பத்தியாகும். 4 பவர் பேக் மூலம் 1200 கிலோவாட் மின்சக்தி உற்பத்தியாகும்.

பாதுகாப்பு எத்தகையது?

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், ஹைட்ரஜன் எரிபொருளைப் பாதுகாப்பாகக் கையாள ரயில் புறப்படும் இடத்தில் ஹைட்ரஜன் கசிவு கண்டறியும் கருவிகள், தீ தடுப்பு கருவிகள், சென்சார்கள் வைக்கப்பட்டிருக்கும், இது தவிர தொடர்ச்சியான கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இதை கவனிப்பர், சோதனை ஓட்டத்தின்போது, தொழில்நுட்ப ஊழியர்களும் உடன் செல்வார்கள். ஹைட்ரஜன் வாயு ஆபத்தானது என்பதால், அதை பாதுகாப்பாக பயன்படுத்தி இயக்குவதற்காக பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பும் அனுமதியளித்துள்ளது.

ரயிலில் பிரத்யேகமான, அதிக பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்ட பெட்டியில் அதிக அழுத்தம் கொண்ட ஹைட்ரஜன் நிரப்பப்படும். இந்த ஹைட்ரஜன், காற்றுடன் வேதி வினை புரியும்போது மின்சாரம் உற்பத்தியாகி அதன் மூலம் ரயில்கள் இயங்கும்.

டீசல் இன்ஜின்களைப் போல் அல்லாமல், இந்த ரயில் கார்பனையோ அல்லது கரும்புகையையோ வெளியிடுவதில்லை. மாறாக, ஹைட்ரஜன் வேதி வினையால் நீராவி மட்டுமே துணைப் பொருளாக வரும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் இல்லை.

எப்போது தொடக்கம்?

ஜூலை மாதம் 17-ம் தேதி இந்தியாவிலேயே ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

எவ்வளவு வேகம், எத்தனை பெட்டிகள்?

உலகிலேயே மிக நீண்ட ஹைடர்ஜன் ரயிலாக இந்தியாவின் ரயில் இருக்கும். ஏனென்றால், சோதனை ஓட்டமாக இயக்கப்படும் இந்த ரயலில் பயணிகளுக்கான 8 பெட்டிகள், 2 பைலட் பெட்டிகள் இணைக்கப்படும். அதிகபட்சமாக 2,400 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யு இயங்கும்.

இந்த 8 பெட்டிகளில் 682 பயணிகள் பயணிக்க முடியும். ஜிந்த் - சோனிபட் இடையிலான ரயில்வே வழித்தடத்தில் 89 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதலில் இயக்கப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம், ஆனால், தொடக்கத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்துக்கே இயக்ககப்படுகிறது. தினசரி 2 முறை இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018-ல் இயக்கப்பட்டது. இதன்பின் ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா தங்கள் நாட்டுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கின.

வடக்கு ரயில்வே மண்டலத்தின் உயர் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் “இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் டீசல் இன்ஜின் ரயில்களுக்கு மாற்றாகவும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும்தான் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த ரயிலில் இருக்கும் பவர் செல்கள், நிலையான மின்சாரத்தை ரயில் இயங்க வழங்கும், மின்சாரம் சப்ளை ஏறவோ, இறங்கவோ அல்லாமல் சீராக இருக்கும். ரயில் இயக்கத் தொடங்கியதில் இருந்து பவர் செல்லில் இருந்து மின்சாரம் உற்பத்தியாகும்.

ரயில் நிலையத்தை நெருங்கி, வேகத்தைக் குறைக்கும்போது மின் தேவை குறையும், ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டிருக்கும்போது, எரிபொருள் மூலம் பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இந்த ரயிலில் பயன்படுத்தப்படும் பேட்டரி கனடாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சவால்கள் என்னென்ன?

இந்த ரயிலை இயக்குவதில் இருக்கும் சவால்களில் முக்கியமானது, ஹைட்ரஜன் எரிபொருளை சேமித்து வைப்பதாகும். ஹைட்ரஜனை ‘பார்’ கணக்கில் அளவிடுவார்கள். 200 முதல் 500 பார்கள் ரயில்வே நிலையத்தில் சேமிக்க முடியும். ஹைடர்ஜன் வாயு எடை குறைவானது என்பதால், இதை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதும் கடினமாகும்.

ஹைட்ரஜன் எரிபொருளை சேமிக்க ஜிந்த் ரயில்வே நிலையத்தில் 3,000 கிலோ கொள்ளளவு கொண்ட டேங்கர் அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை சேமிக்கும்போது மைனஸ் 15 டிகிரி அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் இதற்காக கூலிங் பிளான்ட் அமைக்கப்பட வேண்டும்.

குளிர்ந்த நிலையில் இருந்தால் ஹைட்ரஜன் திரவ நிலைக்கு வரும். அப்போதுதான் எளிதாக கொண்டு செல்ல இயலும். எளிதாக தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அதிக பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
எஸ்.ஜானகி: 33 மாநில விருதுகளைப் பெற்ற இசை அரசி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in