Last Updated : 05 Apr, 2023 07:55 PM

 

Published : 05 Apr 2023 07:55 PM
Last Updated : 05 Apr 2023 07:55 PM

லெவல் கிராசிங்கில் திடீர் கோளாறை தவிர்க்க மதுரை - திண்டுக்கல் ரயில் பாதையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

மதுரை: மதுரை - திண்டுக்கல் ரயில் பாதை பிரிவில் கூடல் நகர் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் (எல்சி எண் 358, பாப்பாகுடி கேட்) சிக்னல் இன்டர்லாக் செய்யப்பட்ட ஆக்சிலரி ஸ்லைடிங் பூம்கள் நிறுவப்பட்டுள்ளது. இவ்வசதி தொழில்நுட்பக் கோளாறு, வாகனங்களாலும் கேட்டிற்கு சேதம் ஏற்படும்போது கேட்டின் செயல்பாடு எளிமையாக்கப்படும் என, கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: இத்தொழில்நுட்பம் மதுரை கோட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மதுரையில் - திண்டுக்கல் ரயில் பாதையில் மேலும் 6 லெவல் கிராசிங் கேட்களில் இந்த தொழில்நுட்பம் இன்னும் இரண்டு மாதங்களில் நிறுவப்படும்.

இதன்படி, லெவல் கிராசிங் எண். 259 (திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல்), லெவல் கிராசிங் எண்.346 (திண்டுக்கல் -மதுரை), லெவல் கிராசிங் எண்.5 (மதுரை - மானா மதுரை),லெவல் கிராசிங் எண். 518 (மானாமதுரை - ராமேஸ்வரம்), லெவல் கிராசிங் எண் 393 (மதுரை - விருதுநகர்), லெவல் கிராசிங் எண். 487 (வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி) பிரிவில் ஏற்படுத்தப்படும்.

இத்தொழில்நுட்பத்தின் பலன்கள்; தற்போதைய லிஃப்டிங் தடுப்பு அமைப்பில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அல்லது வாகனம் மோதி தடுப்பு அமைப்பில் ஏதேனும் சேதம் அடைந்தால் ரயில்களின் இயக்கம் இடையூறு இன்றி தொடரலாம். சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கேட் கீப்பருக்கு இவ்வசதி உதவியாக இருக்கும். துணை ஸ்லைடிங் பூம்கள் இல்லாத நிலையில், எல்சி கேட்டிலுள்ள தூக்கும் அமைப்பில் சேதமோ / தொழில்நுட்பக் கோளாறோ ஏற்பட்டால் கேட் மற்றும் சிக்னலில் இன்டர்லாக் சிஸ்டம் செயலிழந்து, கேட் கீப்பர், கேட்டை மூடிவிட்டு ரயில்களை மெதுவாக இயக்கவேண்டி இருக்கும்.

மேலும் சாலையின் குறுக்கே பாதுகாப்புச் சங்கிலி கட்டப்பட்டு, கேட்டின் குறுக்கே சாலை இயக்கத்தை நிறுத்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். இவ்வாறான சூழலில், ரயில்களை இயக்கும்போது, ​​ரயில் லெவல் கிராசிங் கேட்டிற்கு முன்பே நிறுத்தப்பட்டு கேட் கீப்பரால் காட்டப்படும் கை சமிக்ஞையை அவதானிப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் லெவல் கிராசிங்கைக் கடந்து செல்லும். இது கணிசமான நேரத்தை எடுத்துக் கொள்வதோடு, ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படுத்தக்கூடும்.

இந்நேரத்தில் லெவல் கிராசிங் கேட்களில் சாலை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்படும். இத்தொழில் நுட்பம் லெவல் கிராசிங் கேட்களில் இத்தகைய சூழ்நிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இவ்வசதி சிக்னல்களுடன் இன்டர்லாக் செய்யப்பட்டிருப்பதால் ரயில் இயக்கத்திற்கு சாதகமான சூழலை உறுதி செய்கிறது. ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படும். லெவல் கிராசிங்குகளில் சாலை வாகனங்களின் நெரிசலை தவிர்க்கலாம். இதன் மூலம் ரயில் பணியாளர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோரின் நேர விரயம், மன உளைச்சல் தவிர்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x