

சிவகாசியில் நேற்று ெதாடங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-வது மாநில மாநாட்டில், காந்தியடிகள் நினைவுநாளை முன்னிட்டு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள்.
சிவகாசி: ‘சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் இன்னொரு அறிவொளி இயக்கத்தை நடத்த வேண்டும்’ என்று அறிவியல் இயக்க மாநாட்டில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-வது மாநில மாநாடு சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
இம்மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. வரவேற்புக் குழுத் தலைவர் பி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் அவர் பேசும்போது, “பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கல்வியைக் கொண்டு செல்வதில் அறிவியல் இயக்கத் தொண்டர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில், கல்விப் பணிகளில் அறிவியல் இயக்கத்துக்குத் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்கிறது” என்றார்.
அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில்தான் தோன்றினான் என்பதும், அங்கிருந்துதான் உலகம் முழுவதற்கும் மனிதகுல பரவல் நடைபெற்றது என்பதும் அறிவியல்ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட உண்மை. இந்த உண்மைக்குப் புறம்பாக, வேத கதைகளில் சொல்லப்படுவதை எல்லாம் வரலாறாக மாற்றும் முயற்சிகள் இப்போது நடைபெறுகின்றன.
அறிவியல் மனப்பான்மை: இத்தகைய சூழலில், உண்மையான அறிவியலை மக்களிடம் நாம்தான் கொண்டுசெல்ல வேண்டும். முன் எப்போதையும் விட மக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்து, அறிவியல் மனப்பான்மை கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கான கடமை நமக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் அறிவொளி இயக்க காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனவே, இன்னொரு அறிவொளி இயக்கத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். அதற்கான திட்டங்கள் பற்றி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கணித அறிவியல் விஞ்ஞானி ஆர்.ராமானுஜம் பேசும்போது, “சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்காகவே இந்தியாவில் முதலில் மக்கள் அறிவியல் இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இன்றைக்கும் சூழலியல் சார்ந்த பல பிரச்சினைகள் நம் முன்னே இருக்கின்றன.
காற்று மாசு, நீர் மாசு பெருகியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கான காரணங்கள் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டும். அதற்கான பணிகளை அறிவியல் இயக்கம் செய்ய வேண்டும்” என்றார்.
மாநாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் கு.அரவிந்தன், அறிவியல் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள் டி.தாமஸ் பிராங்கோ, பி.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
அறிவியல் இயக்க மாநில நிர்வாகிகள் த.திருநாவுக்கரசு, எம்.எஸ். முகமதுபாதுஷா, எஸ்.சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அனைவரும் வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.